சென்னை: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி. சிவனந்தன் எழுதிய “தி பிரம்மாஸ்திரா ஆன்லீஷ்ட்” என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. பள்ளி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான ஆர்.கே. ராகவன், யஷோவர்தன் ஆசாத், பேராசிரியர் டாக்டர் மோகன்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.
இந்த விழாவை சுந்தரம் நடராஜன் பிளைண்ட் ஃப்ரீ இந்தியா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். நடராஜன், சென்னை இன்டர்நேஷனல் செண்டருடன் இணைந்து நடத்தியிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் சேர்ந்த 1976 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான டி. சிவனந்தன், மும்பை காவல் ஆணையராகவும், தானே மற்றும் நாக்பூர் நகர காவல் ஆணையராகவும், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். 2011ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
1980–90களில் மும்பை நகரம் கொலைகள், கடத்தல்கள், மிரட்டல் வசூல்கள், கும்பல் மோதல்கள் போன்ற குற்றச்சம்பவங்களால் அதிர்ச்சியில் இருந்தது. அந்த நிழல் உலக குற்றவாளிகளை ஒடுக்கி நகரத்தில் அமைதியை மீட்டதில் டி. சிவனந்தன் முக்கிய பங்கு வகித்தார்.
அந்த காலத்தைய உண்மை சம்பவங்களையும், தனது காவல் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியுள்ள “தி பிரம்மாஸ்திரா ஆன்லீஷ்ட்” புத்தகம், காவல்துறை வீரத்தையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பரபரப்பான அந்த காலத்தின் நிகழ்வுகளை சுவாரஸ்யமான நடைமுறையில் விவரித்துள்ளார்.
முன்னதாக “சாணக்யாஸ் செவன் சீக்ரெட்ஸ் ஆஃப் லீடர்ஷிப்” என்ற விற்பனையில் சாதனை படைத்த நூலின் இணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
மேலும், 2017ஆம் ஆண்டு ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் ரோட்டி பாங்க் மும்பை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். இதன் மூலம் இதுவரை 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட விருந்தினர்கள், டி. சிவனந்தனின் சேவையையும் எழுத்தின் ஆழத்தையும் பாராட்டினர்.