Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பையில் 11 மணிநேரத்தில் 20 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது: கனமழை, பெரு வெள்ளம் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்து, நாண்டேட் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையில் 11 மணிநேரத்தில் 20 செ. மீ மழை கொட்டி தீர்த்தத்தால் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாண்டேட் மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 30 செ. மீ மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாத்துங்கா, பத்ரா கிழக்கு விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில், பல அடி உயரத்துக்கு ஓடும் தண்ணீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில், ஆறு போல் ஓடும் தண்ணீரில் இளைஞர்கள் நீச்சலடிக்கும் காட்சிகளும் அரங்கேறின. சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தானேவிலிருந்து மும்பை செல்லும் புறநகர் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

இதனால் கடைசியாக இயக்கப்பட்ட ரயிலில் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறிய நிலையில், சிலர் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். மிதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாண்டேட் பகுதியில் உள்ள அம்பேத்கார் நகரில் வீடுகள் மற்றும் பொருட்கள் அடித்து செல்லப்பட்டதால் அங்கு வசிப்பவர்கள் செய்வதறியாது தவித்தனர். தானே மாவட்டத்தில் கல்வ நல்வாடா கோபு கிழக்கு பகுதிகளிலும் கனமழையால் சாலைகள், குடியிருப்புகள் மூழ்கியது. தானே பல்கர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகளிருந்து 200க்கு மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே கனமழை பெருவெள்ளம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.