பயன்பாட்டை நிறுத்த கோரிக்கை முல்லை பெரியாறு அணை வழக்கில் ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக்கோரி ‘சேவ் கேரளா பிரிகேட்’ எனும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது, வலுவாக உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நீதிபதிசந்திரன், பழமை வாய்ந்த அணை எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடாக உள்ளது என்பதை நீங்கள் விளக்க வேண்டும் என மனு தாரரிடம் கேட்டுக் கொண்டதோடு, புதிய அணை கட்டப்படுமேயானால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் எவ்வாறு கிடைக்கும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கிரி, புதிய அணை என்பது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றியே கட்டப்படும் என தெரிவித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தது.