Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம்: குழாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

மதுரை: அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக, மாநகரில் பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும், சீரான முறையில் தினந்ேதாறும் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் மார்ச் இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருக்கிறது. அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் வருமாறு: முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை மற்றும் ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல்.

பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல். இதேபோல் பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல். பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 55.44 கி.மீ தூரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல். 37 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் ஒரு தரைமட்ட தொட்டி ஆகியவற்றை கட்டுதல். மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் உள்ள 32 வார்டுகளில் 855 கி.மீ நீளத்திற்கும் மற்றும் மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள 57 வார்டுகளில் 813 கி.மீ நீளத்திற்கும் குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் மற்றும் வீட்டு இணைப்புகள் வழங்குதல்.

இப்பணிகளை ஐந்து பிரிவுகளாக முடிக்க திட்டமிடப்பட்டு விரைவாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன்படி மதுரை மாநகரில் தற்போது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாக குடிநீர் கொண்டு வருவதற்கான பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.