ம.பி.யில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 2017ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், தண்டனை காலத்துக்கும் கூடுதலாக சிறையில் அடைத்து வைத்திருந்ததாகக் கூறி சோஹன் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது. அப்போது, தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடுதலை செய்யாதது அடிப்படை உரிமையை மீறும் செயல் என கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சோஹன் சிங்குக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாநிலத்தில் இதுபோல தண்டனைக் காலம் முடிந்தும் யாராவது விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்களா என விசாரணை நடத்துமாறு மத்திய பிரதேச சட்ட சேவைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.