Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாயில் துர்நாற்றமா… கவலை வேண்டாம்!

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கிறார்களா? இனி கவலையே வேண்டாம். இயற்கை முறையில் வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. ஒருசிலருக்கு தங்கள் வாயில் இவ்வளவு துர்நாற்றம் வீசுகிறதா என்பது தெரியாமலேயே பேசுவர். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்கு தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் அலர்ஜி ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும். இதற்கு வீட்டிலேயே சரிசெய்துகொள்ள பல வழிகள் உள்ளன அவற்றில் 10 இங்கே காணலாம்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழிகள் பத்து

* உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், மௌத் பெரெஷ்னர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

* மவுத் வாஷர் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

* வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம்.

* அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

* வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

* குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காபியைத் தவிர்த்து விட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

* காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

* வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பற்களை சுத்தம் செய்து கொள்வதன் மூலம் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

* அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

* சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.சாப்பிட்ட பிறகு மறக்காமல் வாய் கொப்பளித்து விடுங்கள். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குகள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்கப்போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்கமுடியும்.கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது (Mouth odor is cause by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

- எஸ். ரமணி