*அரசு உதவி கிடைக்குமா?
புளியங்குடி : தென்காசி இடைகால் அருகே நடந்த கோர விபத்தில் பலியான புளியங்குடி மல்லிகாவின் உடல் அடக்கம் நிகழ்வில் பார்வையற்ற அவரது மகள் கதறிய சம்பவம் கல் நெஞ்சையும் கரை வைப்பதாக இருந்தது.தென்காசி மாவட்டம், இடைகால் அருகே துரைச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் உயிரிழந்த புளியங்குடி முத்துராமன் மனைவி மல்லிகா உடல் தென்காசி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு நேற்று நல்லடக்கத்திற்காக புளியங்குடி கொண்டு வரப்பட்டது. மல்லிகாவிற்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். பெண் பிள்ளைகளில் ஒருவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. மல்லிகா கணவர் இறந்த நிலையில் தனது சுயநினைவில்லாத 85 வயது தாயாரையும் கவனித்து வந்தள்ளார்.
மல்லிகாவின் கணவர் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே காலமாகி விட்டார். கைம்பெண்ணான மல்லிகா குழந்தைகளை பீடி சுற்றி கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்துள்ளார். இதில் கண் பார்வையற்ற 33 வயதான பெண் கீர்த்திகா, தன் தாயின் உடல் வந்ததும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. அப்போது அவர் கூறுகையில், நான் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே எனது தந்தை முத்துராமன் தவறி விட்டார்.
எனது அம்மா என்னையும் என் அண்ணன், என் அக்காவையும் பீடி சுற்றி மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். என்னுடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகி விட்டது. எனக்கு கண் பார்வை இல்லாததால் இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் எம்ஏ பிஎட் படித்துள்ளேன். எம்ஏ ஆங்கிலம் முடித்துள்ளேன். இரு முறை டெட் எக்ஸாமில் தேர்வாகியுள்ளேன். கணிப்பொறி தட்டச்சு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தகப்பன் இல்லாத என்னை என் தாய் நன்றாகப்படித்து வைத்தார்.
இப்போது தாய் இல்லாததால் எனது வாழ்வே இருண்டு போய்விட்டது, என்றார். பாதுகாப்பாக இருந்த தாயாரை விபத்தில் இழந்து விட்டதால் முதலமைச்சர் எனக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கி கண் தெரியாத என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
தனியார் வாகனங்களில் வசூல் போட்டியால் என் தாய் தவறி விட்டதாகவும், இதுபோல் நிகழ்வு இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இனியாவது தனியார் பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இனி இப்படி ஒரு விபத்து நடக்காத வண்ணம் காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


