Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பிறந்து 42 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பிறந்து 42 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய் கைது செய்தனர். பெண் குழந்தை பிறந்ததால் மாமியார் தொடர்ந்து திட்டி வந்ததால் குழந்தையின் சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை கொன்ற பெனிட்டா ஜெய அன்னாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காத்திக் (21), பெனிட்டா ஜெய அன்னா (20) இருவரும் ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். குழந்தை பிறந்ததும் தன்னிடம் கணவர் அன்பு காட்டவில்லை எனவும் பெனிட்டா ஜெய அன்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (வயது 20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கர்ப்பிணியாக இருந்த பெனிட்டா ஜெய அன்னாளுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி இரவு கார்த்திக் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் அவருடைய குழந்தை அசைவற்ற நிலையில் கிடந்துள்ளது. இதுபற்றி மனைவியிடம் கேட்டபோது பாலூட்டிய போது குழந்தை தவறி கீழே விழுந்து காயமடைந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குழந்தையை மீட்டு கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து கார்த்தி கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குழந்தையின் தாயை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார். மேலும் குழந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து பகீர் தகவலையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதில், எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. அன்றில் இருந்தே என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் குழந்தை தான் என்ற ஆத்திரத்தில் சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.