சென்னை: சசிகலா ரூ.450 கோடி பண பரிவர்த்தனையில் பினாமி மூலம் வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையை மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.450 கோடிக்கு முழுமையாக பணமாக கொடுத்து வாங்கியதாக, சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெங்களூருவில் உள்ள சிபிஐ.யின் வங்கி, பத்திரங்கள் மற்றும் மோசடி பிரிவு, பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை ரூ.120 கோடிக்கு ஏமாற்றியதாக கூறப்படும் வங்கி மோசடி குறித்து விசாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்த சிபிஐ, ஆகஸ்ட் மாதத்தில் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்தியது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை 2020ம் ஆண்டில் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளது.
அதில், 2017 நவம்பரில் சசிகலா மற்றும் பிறரின் சொத்துக்களில் பினாமி சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது, குற்றம் சாட்டக்கூடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி விவகாரங்களை நிர்வகித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், சத்தியப்பிரமாணமாக அளித்த வாக்குமூலத்தில், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக மொத்தமாக ரூ.450 கோடியை பழைய ரூபாய் நோட்டுகளாக பெற்றதாகவும், அதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்றும் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தனது தந்தையான ஷிவ்கன் படேல் மற்றும் அவரது சகோதரர் தினேஷ் படேல் ஆகியோருடன் இணைந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர், வருமான வரித்துறை அந்த சர்க்கரை ஆலையை பினாமி சொத்து என்று அறிவித்து, சசிகலாவை அதன் உண்மையான உரிமையாளராக குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சர்க்கரை ஆலைக்கு எதிராக வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை, பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன் கணக்குகளை மோசடி என்று அறிவிக்க, ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை, பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட், அதன் இயக்குநர்களான ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் ஷிவ்கன் படேல், தம்பூராஜ் ராஜேந்திரன், பாண்டிய ராஜ் மற்றும் தலைமை நிதி அதிகாரி வெங்கட பெருமாள் முரளி ஆகியோரை குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ முதலில் பதிவு செய்யவில்லை. போதுமான தகவல் இல்லை என்றும், மாநில அரசின் பொது ஒப்புதல் திரும்ப பெறப்பட்டது என்றும் கூறிவந்த நிலையில், ஜூன் மாதத்தில் இந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியது, வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்கு திசை திருப்பியது, தொடர்புடைய நிறுவனங்களுக்கு பணத்தை மாற்றியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்க பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும், கடன் வாங்கிய பணத்தின் இறுதி பயன்பாட்டை மறைக்க, போலி அல்லது பினாமி நிறுவனங்களுக்கு பணத்தை மாற்றியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ளதால், சசிகலா மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.