சென்னை: தமிழ்நாடு முதல்வரின் 50வது திருமண நாளையொட்டி, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: அம்மாவும் - அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் - இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் - கடும் அரசியல் சூழல்கள் - தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா! அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா!
பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது, அப்பா கண்டிப்பானவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்! அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்!.