புதுடெல்லி: பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இன்று செப்டம்பர் 11. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோகன் அவர்களின் குடும்பத்துடனான எனது தொடர்பு மிக வலிமையானது. அவரது தந்தை மறைந்த மதுகர்ராவ் பகவத் அவர்களுடன் நெருங்கி பணியாற்றும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருந்தேன். 1970களின் மத்தியில், மோகன் பகவத் பிரச்சாரகராக மாறினார்.
அப்போதுதான் அன்றைய காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டிருந்த மிக மோசமான அவசரநிலை அமலில் இருந்தது. ஜனநாயக கோட்பாடுகளை மதித்து, இந்தியாவின் செழுமையில் விருப்பம் கொண்டிருந்த அனைவரும் அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை வலிமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினர். மோகன் அவர்களும், எண்ணிலடங்காத ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இதையேதான் செய்தனர்.
அதன் பிறகான ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்-இல் பகவத் அவர்கள் ஏராளமான பொறுப்புகளை வகித்தார். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஒவ்வொன்றையும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் சிரத்தையுடன் அவர் மேற்கொண்டார். 2009-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் தொடர்ந்து மிகவும் துடிப்பாக பணியாற்றி வருகிறார். தமக்கு அளிக்கப்பட்ட இமாலய பொறுப்பிற்கு முற்றிலும் நேர்மையை வெளிப்படுத்தியதுடன், தமது வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இரக்க குணத்துடன் கூடிய தலைமைத்துவத்தையும் மோகன் அவர்கள் அளித்துள்ளார்.
இவை அனைத்தும் தேசத்திற்கு முன்னுரிமை என்ற கொள்கையால் ஈர்க்கப்படுகின்றன. மோகன் அவர்கள், தனது மனதிற்கு நெருக்கமாகக் கொண்டு, தனது பணிமுறையில் பின்பற்றி வரும் இரண்டு பண்புகளை நான் குறிப்பிட வேண்டுமானால், அவை தொடர்ச்சி மற்றும் தகவமைப்பு ஆகியனவாகும். மோகன் பகவத்தின் பதவிக்காலம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாண்டு கால பயணத்தில் மாற்றகரமான தருணமாகக் கருதப்படும்.
சீருடையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் முதல், பயிற்சி முகாம்களை மாற்றி அமைத்தது வரை அவரது தலைமையின் கீழ் ஏராளமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மிகுந்த ஞானமும் கடின உழைப்பாளியுமான மோகன்ஜியை தலைவராக நாம் பெற்றிருக்கிறோம், நம்மை சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார். மோகன் அவர்கள் வசுதைவ குடும்பகம் என்பதற்கு ஒரு வாழும் உதாரணம். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.