வாஷிங்டன்: இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், பிரதமர் மோடி தனது நண்பர் என்றும் புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்குப் பதிலடியாக, சில இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதித்ததால், இருநாட்டு உறவிலும் வர்த்தகத்திலும் ஒருவித தேக்கநிலை நிலவியது. ஆனால் தற்போது, இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களும் சமீபத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம், ‘அடுத்த ஆண்டு இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‘ஆம், அதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி குறித்துப் பேசிய அவர், ‘பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் என் நண்பர், நாங்கள் தொடர்ந்து பேசிக்கொள்கிறோம்’ என்று புகழ்ந்துரைத்தார். அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ‘குவாட்’ மாநாட்டுடன் இணைந்து இந்த பயணம் அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், கடந்த 2020 பிப்ரவரியில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

