சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு காத்திருந்த நிலையில் புற்றுநோயுடன் போராடிய மாடல் அழகி மரணம்: 28 வயதில் நேர்ந்த சோகம்
குவாத்தமாலா: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குவாத்தமாலா நாட்டு அழகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ராகுல் எஸ்கலான்ட் (28) என்பவர், கடந்த 2021ம் ஆண்டு ‘மிஸ் இன்டர் கான்டினென்டல்’ அழகிப் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர். இவருக்கு, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்த அவர், சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் நிதியுதவி கோரியிருந்தார்.
புற்றுநோயின் தாக்கம் அதிகமானதால், ராகுல் எஸ்கலான்ட்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. குறிப்பாக அவரது சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரகக் கோளாறு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அழகிப் போட்டி அமைப்பாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே புற்றுநோய்க்குப் பலியான இவரின் மறைவு, பெண்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனையின் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

