எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட காந்தா திரைப்படத்திற்கு தடைகோரி பேரன் வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள் பதில்தர சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த வேபேரர் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்பிரிட் மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து காந்தா என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளன.
இந்த படம், எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 14ம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். படத்தில், கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றியிருந்தாலும் அதனை மக்கள் நினைவுகூற முடியும். பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கண்பார்வை இழந்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி, கடனாளியாக இறந்ததாக படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர் சொந்தமாக பங்களா வைத்திருந்ததார்.
பிளைமுத் மற்றும் செவ்ரலட் போன்ற விலை உயர்ந்த கார்களை வைத்திருந்ததார். எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. எனவே, அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், அவதூறான முறையில் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள காந்தா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை 7வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், நவம்பர் 18ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
