கோவை சுந்தராபுரத்தில் முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பியை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை: கோவை சுந்தராபுரத்தில் முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பியை முதலமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பியின் இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தி.மு.க. மூன்றெழுத்தெல்ல; உள்ளிருந்து நம்மை இயக்கும் உயிரெழுத்து. நேரம் காலம் பார்க்காமல் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கழகப் பணி ஆற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், மேற்கு மண்டலத்துக்குள் நுழைந்தாலே, “நம் வீடு இருக்கிறது வாருங்கள்” என்று அழைத்துச் சென்று கவனித்துக் கொண்ட கழகச் சொத்துப் பாதுகாப்புக்குழு முன்னாள் உறுப்பினரான ஜெ.கே.கே.சுந்தரம் அவர்களது இல்லத்திற்கு நெடுநாள் கழித்து இன்று சென்றேன்.
பாசத்துடன் வரவேற்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் அவரது துணைவியார் ராஜாம்மாள். அவரது மகனும் தற்போதைய சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம் அவர்களும் அவரது குடும்பத்தினரும் என் மேல் பொழிந்த பாசத்தில் நனைந்து - உள்ளம் நெகிழ்ந்தேன். அடுத்ததாக, கழக மூத்த முன்னோடியும், தனது கம்பீர உரைவீச்சால் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முத்திரை பதித்தவருமான விடுதலை விரும்பி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது நலனை விசாரித்தேன்; அவரோ #SIR பணிகள் குறித்துக் கேட்டு, மக்களின் வாக்குரிமை என்ற ஜனநாயக நலன் குறித்து விசாரித்தார். முதுமையில் அனுபவங்களை அசைபோடுபவர்களுடன் அன்பாய் ஆறுதலாய் இருக்கும் நேரங்களில் மனம் இளமையாகிறது! அவர்களும் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்


