Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமயம், துறையூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்பட உத்தரவு

சென்னை: திருமயம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்பட உத்தரவிட்டார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 63 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். மக்களை வீடு, வீடாக நேரில் சென்று சந்தித்து திமுக அரசின் திட்டங்களை விளக்கி கூற வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள். இன்னும் அரசிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறார் என்ற விவரத்தை கேட்டறிய வேண்டும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ெதாகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்தித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.