Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மிக்சர் மாஸ்டராக வந்தவர் காதல் மாஸ்டராக போனார்: முதலாளி மனைவியை அபகரித்த 19 வயது வாலிபர் குத்தி கொலை; விவாகரத்து கேட்டதால் தீர்த்துக்கட்டிய கணவன்

ஜோலார்பேட்டை: முதலாளி மனைவியை அபகரித்த 19 வயது வாலிபரை கணவன் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(35). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ராகாரம் பகுதியில் மிக்சர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் மிக்சர்போடும் மாஸ்டராக கடந்த 4 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பவன்குமார்(19), இவரது தம்பி 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பவன்குமாருக்கும், முதலாளியான அல்போன்சின் மனைவி சத்யா(30)வுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த அல்போன்ஸ், 4 மாதங்களுக்கு முன்பு பவன்குமார் மற்றும் அவரது தம்பியை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். இதனையடுத்து அண்ணன், தம்பி இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த மரிமாணிக்குப்பம் தோட்டிகுட்டை கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கினர். இருப்பினும் சத்யாவும், பவன்குமாரும் அடிக்கடி செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த அல்போன்ஸ், சில வாரங்களுக்கு முன் மனைவியை கண்டித்து தாக்கி உள்ளார். இதுதொடர்பாக கணவர் மீது சத்யா பெங்களூரு போலீசில் புகார் அளித்தார்.

அவரிடமிருந்து விவகாரத்து கோரினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அல்போன்ஸ், மனைவியின் கள்ளக்காதலனான பவன்குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதன்படி நண்பர்கள் 3 பேருடன் காரில் வந்த அல்போன்ஸ், பவன்குமார் தங்கியிருந்த வீட்டை கடந்த 2 நாட்களுக்கு முன் கண்டுபிடித்தார். ஆனால் அங்கு அவரது தம்பி மட்டுமே இருந்தார். அவரை காரில் கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பவன்குமார் இருக்கும் இடம் குறித்து கேட்டார். இதனிடையே நேற்றுமுன்தினம் பவன்குமார் பாட்டி வீட்டுக்கு திரும்பினார். இதனையறிந்த அல்போன்ஸ் நண்பர்களுடன் காரில் சென்றார். அங்கு பவன்குமாரை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரி குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அல்போன்ஸ் மற்றும் கும்பல் காரில் தப்பியது.

அக்கம் பக்கத்தினர் பவன்குமாரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூருவில் பதுங்கிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்களான சென்னை பெரம்பூரை சேர்ந்த பாக்யராஜ்(40), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பொன்னையா(37), அழகு என்கிற கதிர்வேலன்(41) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான அல்போன்ஸ் வாக்குமூலத்தில், ‘எனது மனைவியிடம் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பவன்குமாரை வேலையில் இருந்து விரட்டினேன். இருப்பினும் கள்ளத்தொடர்பில் இருந்தார். எனது மனைவியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை சிறுகசிறுக பவன்குமார் பெற்றுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தால் எனது மனைவி என்னை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தார். எனவே எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை வீடு தேடிவந்து வெட்டிக்கொன்றேன்’ என கூறியதாக போலீசார் ெதரிவித்தனர்.