பாங்காங்: ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது. இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா போட்டியிட்டார். 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த 25 வயமு பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்றார். முதல் ரன்னர் அப் ஆக தாய்லாந்து அழகியும், இரண்டாம் ரன்னர் அப் ஆக வெனிசுலா அழகியும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற பாத்திமா, நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இறுதிப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பணியாற்றினார். இந்தியா சார்பில் போட்டியிட்ட மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்கு வரமுடியவில்லை. அவர் நீச்சல் உடை போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறினார். மிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் என்பவரை அழகி போட்டி நடத்தும் தாய்லாந்து நாட்டின் நிர்வாகி நவத் திடீரென கடுமையாக கடிந்து கொண்டார். இது நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டதால், அதிருப்தி அடைந்த பாத்திமா போஷ் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்தார். பின்னர் இவருக்கு ஆதரவாக சக அழகிகளும் விழா அரங்கில் இருந்து வெளியேறினர். தற்போது அவரே அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


