சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சட்டீஸ்கர் மாநிலத்தில் கிருஷ்ணா குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை அந்த குடும்பத்தினரின் அனுமதியோடு தங்களது விடுதிக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற 2 கன்னியாஸ்திரிகளை பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். பல்வேறு பொய்யான காரணங்களைச் சொல்லி தாக்குதலுக்கு உள்ளான கன்னியாஸ்திரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
2 கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அம்மாநில முதலமைச்சர் இந்த செயலை நியாயப்படுத்தி இருப்பது மதவெறுப்பு அரசியல் அந்த மாநிலத்தில் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. கன்னியாஸ்திரிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காகச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.