சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வெறுப்பு பேச்சால் பாதிக்கப்படுகின்றனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்த கால கட்டத்தில், மிகப்பெரிய அளவிலான பொய்யான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் ஒரு பாசிச கும்பல், பொய்ச்செய்தி பரப்புவதையே அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளார்கள். வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பொய்யை பரப்பினார்கள். உடனே பீகாரில் இருந்து அலுவலர்களை வர வைத்து, வட மாநில தொழிலாளர்கள் இருக்கிற இடங்களுக்கு எல்லாம், நம்ம அரசு சார்பில் அழைத்து சென்று காட்டினோம்.
தவறான தகவல்களை தடுப்பதுடன், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழக அரசு சார்பில் ஒரு பிரத்யேக உண்மைச் சரிபார்ப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவு செயல்படுகிற வேகத்தை பார்த்து, தவறான தகவல்கள் பரப்புகின்ற கும்பல் கதறி கொண்டு இருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாணவர்கள், அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் என இதுவரை 47 ஆயிரம் பேருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாகத் தான், இன்றைக்கு இந்த பயிற்சி பட்டறை உங்களுக்காக நடத்தப்படுது. முக்கியமாக, நீங்கள் எல்லோரும் சமூகத்தில் தவறான தகவல்களை வீழ்த்துவதற்கான போர்வீரர்களாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு அவர் பேசினார்.