14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கேரள நடிகையிடம் கிடுக்குபிடி விசாரணை: 10 ஆண்டுக்கு பின் போலீஸ் நடவடிக்கை
சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் சீண்டல் விழக்கில் கேரள நடிகை கைது செய்து, திருமங்கலம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சீண்டலில் ஈடுபட்டவர்கள் பட்டியலை தயார் செய்து 4 மர்ம நபர்களை பிடிக்க தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்தவர் மினு முனீர் என்ற மினு குரியன் (52).
இவர் கடந்த 2008ம் ஆண்டு கேரளாவில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு 10 வருடங்களுக்கு முன் மினு முனீர் தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் 4 பேர் பாலியல் சீண்டலில் தவறாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பித்து கேரளாவுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில்தான் கேரளா அரசு சார்பில், ஹேமா கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு திரைப்படத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் முன்வந்து புகார் கொடுத்தனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியும் கடந்த 2024ம் ஆண்டு கேரளா காவல்துறையில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
சிறுமி பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பகுதி சென்னை திருமங்கலம் என்பதால் இந்த வழக்கை கேரள போலீசார் திருமங்கலம் போலீசாருக்கு பரிந்துரை செய்து மாற்றினர். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடிகை மீனு முனீர் மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவுக்கு சென்று நடிகை மினு முனீரை அதிரடியாக கைது செய்தனர்.
இதன் பின்னர் நடிகையை ரயில் மூலம் நேற்று காலை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவரிடம் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2014ம் ஆண்டு அதாவது 10 வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது சிறுமியிடம் 4 பேர் பாலியல் சீண்டலில் தவறாக நடந்து கொண்ட, மர்ம நபர்கள் குறித்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலஷ்மி பட்டியல் எடுத்துள்ளார். இவர்களை பிடித்து கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.