சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,912 பேருந்துகள், 10,125க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உள்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை வழங்குவதன் மூலம் தினசரி 1.97 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
இதில் 60 சதவீதம் பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பங்களிப்பு இன்றியமையாததாகும். இதனால் தமிழ்நாட்டின் பேருந்து வலையமைப்பு ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு வலையமைப்பாக விளங்குகிறது.
அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு, 2024-25ம் ஆண்டிற்காக வழங்கப்படும் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.