மும்பை: மகாராஷ்டிரா பேரவை தேர்தல் முடிந்து 12 நாட்களுக்கு பின்னர் முதல்வர் தேர்வு முடிவுக்கு வந்தது. முதல்வராக தேவேந்திர பட்நவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். நேற்று எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் பட்நவிஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகா, யார் யாருக்கு அமைச்சர் பதவி போன்ற விவகாரங்கள் பெரும் இழுபறியில் இருந்து வருகிறது. முதல்வர் பதவியேற்பு விழா முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகும், மகாயுதி கூட்டணியில் முக்கிய இலாகாக்கள் குறித்த மோதல் தொடர்கிறது.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்துறை அமைச்சர் பதவியே கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதால் அமைச்சர்களின் இலாகாக்களை முடிவு செய்வதில் தாமதமாகிறது. தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராக இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட உள்துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கோரி வருகிறார். பட்நவிஸ் அமைச்சரவையில் 43 பேருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


