Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

“பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுவினை” அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

சென்னை: மாணாக்கர்களிடையே பாலின உளவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அரசு கல்லூரிகளிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுவினை” மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்று (08.08.2025) சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு” (Formation of a Monitoring and Awareness Committee on Gender Psychology) அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்து உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசியதாவது:

முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசுக் கல்லூரிகளில் 'பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு' அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று (08.08.2025) சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு அமைத்து உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட இக்கல்லூரி 1969-லிருந்து ஆடவர் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. கடந்த கல்வியாண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. இருபால் தேசிய மாணவர் படையினரும் 13.07.2025 முதல் 23.07.2025 வரை கலந்து கொண்ட நாடு தழுவிய அளவில் நடந்த இரண்டு மலையேற்றப் பயிற்சிப் போட்டிகளிலுமே வெள்ளிப் பதக்கங்களை இக்கல்லூரி மாணவி Cadet. ச.வைஷ்ணவி பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

இக்கல்லூரியில் இதுவரை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4.80 கோடியில் ஆயிரம் இருக்கைகளுடன் கலைஞர் கலையரங்கம், ரூ.44.50 கோடியில் மிகச்சிறப்பான அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மாணவர் விடுதியான எம்.சி. ராஜா விடுதிக் கட்டிடம், மூன்று புதிய பாடத்திட்டங்களும் தொடங்கப்பட்டது. அனுமதி பெற்றுத் தரப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் ஷிப்ட் 2 படிப்புக்கு, B.A.(History), B.A.(Computer Science) அனுமதி பெற்றுத் தரப்பட்டது. மாணாக்கர்கள் பாலின விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது: இந்தியாவிலேயே உயர்கல்வியில் நம் தமிழ்நாடு என்றென்றும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, முதலமைச்சர் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். “நான் முதல்வன்” திட்டம் வருடத்திற்கு ரூ. 10 இலட்சம் மாணாக்கர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 41 இலட்சம் மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவில் IAS, IPS போன்ற அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நமது தமிழ்நாடு மாணாக்கர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாட்டு மாணவியர்கள் எந்தவித தடையும் இல்லாமல் உயர்கல்வியினை பெற “புதுமைப்பெண்” என்ற திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் மாணவியர்களுக்கு மாதம் ரூ. 1,000/- வழங்கப்படுகிறது. இதனால் உயர்கல்வியில் மாணவியர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளது மற்றும் பெற்றோரின் நிதிச்சுமை குறைந்துள்ளதோடு, சமூக முன்னேற்றத்திற்கும் இது வழிவகுத்துள்ளது. இதனை மாணாக்கர்களும் பயன்பெறும் நோக்கில் “தமிழ் புதல்வன்” என்ற திட்டத்தினையும் நமது முதலமைச்சர் வழங்கியுள்ளார்கள்.

மாணாக்கர்கள் கல்வி பயிலும் இடங்கள் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றி செயல்பட ஏதுவாக நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கு இணங்க “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு” உயர்கல்வி நிறுவனங்களில் அமைத்திட அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இக்கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இக்குழு அமைக்கப்படும். உளவியலாளர்கள், சமூகவியல் அறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், பெண்ணுரிமை வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் வழிகாட்டுதலுடன் இக்குழுக்கள் மாணாக்கர்களுக்கு தேவையான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடையே உறவை வலுப்படுத்தவும் இது உதவும். கட்டமைக்கப்பட்ட சமூதாயத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். எனவே, மாணாக்கர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது உயர்கல்வியினை மேற்கொள்ளவும் சமூதாயக் கட்டமைப்புக்கு ஏற்ப தங்களை உருவாக்கி கொண்டு இச்சமுதாயத்தில் வளமுற வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.

பின்னர், அகில இந்திய அளவில் இருபால் தேசிய மாணவர் படை மாணவர்களிடையே நடைபெற்ற மலையேற்ற பயிற்சி போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவி Cadet. ச.வைஷ்ணவி மற்றும் தமிழ்நாடு அரசின் Information Technology and Digital Services உடன் ICT Academy இணைந்து வழங்கிய ICT இன் சிறந்த கல்லூரி விருது மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதினை பெற்ற நந்தனம் அரசு கல்லூரி கணினி அறிவியல் இணைப்பேராசிரியருமான ம. ரமேஷ் குமார் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி ஆணையர் திருமதி எ. சுந்தரவல்லி இ.ஆ.ப., கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் வே. புகழேந்தி, குழுவின் தலைவர் முனைவர் மு. மஜிதாபர்வின், மருத்துவர் திருமதி திருமகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.