சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 1996-2001ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,” அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,”துரைமுருகனை விடுவித்த வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக துரைமுருகன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை ரத்து செய்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.