Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டுதான் வைத்துள்ளதே தவிர பாராட்டியது இல்லை : அமைச்சர் ரகுபதி

சென்னை :"திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரானது கிடையாது" என்று ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, கூறியதாவது, “திராவிடம் என்பது கற்பனை என்றும், தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர் என்றும், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன உள்ளிட்ட கருத்துகளை ஆளுநர் ஆர்.என். ரவி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா அல்லது அது வங்க மொழியில் இருப்பதால் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லையா என்பதை எங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதே ஆளுநரின் வேலை. கமலாலயத்திற்கு வேலை செய்ய வேண்டியவர் தவறுதலாக ஆளுநர் மாளிகைக்கு வந்துவிட்டார். தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளார் ஆளுநர். தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படும்போது ஆளுநர், பிரதமர் ஒரு அறிக்கையாவது விட்டது உண்டா?.திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரான அரசு அல்ல. இந்தியாவில் தமிழ்நாடு ஏதோ துண்டிக்கப்பட்டது போன்று ஒரு மாயத் தோற்றத்தை ஆளுநர் ஏற்படுத்த நினைக்கிறார்.

தமிழ்நாடு தனித்துவிடப்பட்டுள்ளது என ஆளுநர் வீணாக பழி சுமத்துகிறார். தேர்தல் நெருங்குகிறது என்பதால் அதற்கு முன் எதையாவது பேசிப் பார்ப்போம் என ஆளுநர் நினைக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டுதான் வைத்துள்ளதே தவிர பாராட்டியது இல்லை. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும், அதுதான் பலம் என்று எண்ணுபவர்கள் நாங்கள். தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் என்பது கிடையாது; ஆளுநர் பேசியது வெறும் கற்பனையே. இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்யும் பழக்கம் எங்களுக்கு இல்லை."இவ்வாறு தெரிவித்தார்.