ஆவடி: ஆவடி அருகே மிட்டினமல்லி, இந்திய விமானப் படை சாலையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கொண்டாடப்படும் உலக இதய தினத்தை முன்னிட்டு, இன்று காலை 6 மணியளவில் 2வது பகுதியாக, அனைவரது இதயத்தை காக்கும் வகையில் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்-சிறுமிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறுவர்களுக்கு 3 கிமீ, மாணவர்கள் உள்பட பிறருக்கு 5 கிமீ என குறிப்பிட்ட இலக்கை அடைந்தனர். இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், நமது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தினார்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், சன்பிரகாஷ், பொன்விஜயன், பிரேம் ஆனந்த், முனியசாமி, பார்த்தசாரதி, கோவிந்தராஜ், எஸ்.ஒய்.தாஸ், ஐசய்யா, கோபி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.