மழைக் காலத்திற்குள் உயர்மட்ட மேம்பால அடித்தள பணிகள் முடிக்கப்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சென்னை: மழைக்காலத்திற்குள் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை உயர் மட்ட மேம்பாலத்தின் அடித்தள பணிகள் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 3.20 கி.மீ. நீளத்திற்கு, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் ரூ.621 கோடியில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 19.1.2024 அன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த மேம்பாலப் பணிகளின் முன்னேற்றத்தை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
தற்போது வரை 30 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் அடித்தள, மைக்ரோ பைல், ஜியோ சிந்தடிக் லேயர் மற்றும் வெல்டிங் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்திற்கு முன் அடித்தள பணிகள் நிறைவு பெறும் வகையில் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளை முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.