நீங்கள் எவ்வளவு அறிவுடையவராக இருந்தாலும், அந்த அறிவுத் திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் அறிவு மென்மேலும் வலுப்படும். எப்பொழுதுமே உங்கள் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கூர்மைப்படுத்திக் கொண்டே இருங்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் துறை சார்ந்த தகவல்களை ஆர்வத்துடன் படிக்கவோ,தெரிந்து கொள்ளவோ முயலுங்கள்.அடுத்த கட்டம், அடுத்த நிலை என்ற ஆராய்ச்சி மனப்பான்மையுடன்அத்துறை சார்ந்தவற்றை அறிந்து தெளிவடையுங்கள். எப்போதும் நீங்கள் தெளிவான சிந்தனையுடனும் எண்ணங்களுடனும் சுயமான அறிவுடனும் செயல்பட்டால் அந்த அறிவே சக்தியாக வெளிப்படும்.அந்த சக்தியே மென்மேலும் உங்களை உயர்த்தும். உங்கள் எதிர்மறை எண்ணங்களை மாற்றி விடும்.
அந்த சக்தி புதிய சிந்தனையுடன் புதிய பாதையை உருவாக்க வைத்து உங்களை முன்னேற்ற பாதையில் செலுத்தி வெற்றிகளை காண வைக்கும். உலகை வியக்க வைத்த சாதனையாளர் மேரி கியூரி தனது ரேடியம் ஆய்வின் போது வெளிப்பட்ட கதிர்வீச்சால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அப்போது அவரை சோதித்த மருத்துவர். உடலில் உள்ள திசுக்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. அதனால் கியூரி அம்மையார் உடனடியாக தனது ஆய்வை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் எச்சரித்தார்.ஆனால் கியூரி ஒப்புக்கொள்ளவில்லை, என் ஒருத்தியின் உயிர் போனால் பரவாயில்லை என் ஆய்வினால் லட்சக் கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார்.மேரி கியூரிக்கு தனது இலக்கை போற்றி தனது அறிவை பயன்படுத்தி துணிச்சலோடு சவால்களை எதிர்கொண்டதால் தான் வெற்றி சாத்தியமானது.
அறிவியல் ஆய்வுகளை தொடர்ந்து செய்வதையே தனது இலக்காகக் கொண்டிருந்தார். தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் உயர வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் இலட்சிய பாதையில் இறுதிவரை நடைபோட்டார்.இவரைப் போலவே தனது ஒப்பற்ற அறிவு சக்தி மூலமாக தொழில் முனைவராகி சாதித்து கொண்டிருக்கும் ஒரு சாதனை பெண்மணியை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
17 ஆண்டுகள் வெற்றிகரமாகபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றிய ராதிகா அவர்கள் 2007ம் ஆண்டில் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கான அதிநவீன தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக ‘பினாகா ஏரோஸ்பேஸ்’ (PINAKA AEROSPACE) நிறுவனத்தைத் தொடங்கினார். நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான கடல்வழி, தரை அடிப்படையிலான மற்றும் வான்வழி அமைப்புகளை உள்நாட்டிலே உருவாக்குவதில் நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பெண்கள் அரிதாகவே காணப்பட்ட ஏரோஸ்பேஸ் துறையில் ராதிகா காலடி எடுத்து வைத்தார். ஆனால், அவர் ஒரு தனித்துவமான ஒரு புதிய பாதையை உருவாக்குவதில் தீர்க்கமாக இருந்தார். ஹைதராபாத்தில் பிஎஸ்சி முடித்த பிறகு, மைசூருவில் கணினி அறிவியலில் எம்எஸ்சி படித்தார். 1991ம் ஆண்டில், ராதிகா ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்பு மின்னணு ஆராய்ச்சி ஆய்வகத்தில் (டிஇஆர்எல்) பணியில் சேர்ந்தார். அடுத்த 17 ஆண்டுகளுக்கு அவர் வான்வழி மற்றும் தரை அடிப்படையிலான மின்னணு போர் மற்றும் தகவல் தொடர்பு நுண்ணறிவு அமைப்புகளின் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்தார்.ஆரம்பத்தில், எலக்ட்ரானிக்ஸின் டிஜிட்டல் பகுதியை புரிந்துகொள்வதற்கு அவர் அதிகம் மெனக்கெட வேண்டியிருந்ததாக நினைவு கூர்ந்தார்.5 வருடங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்த பிறகு, மற்றொரு டிஆர்டிஓ ஆய்வகமான - டிஃபென்ஸ் ஏவியனிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய பெங்களூருக்குச் சென்றார். ஹைதராபாத்தில் அவர் தரை மற்றும் கப்பல் அடிப்படையிலான மின்னணுப் போர்களில் பணிபுரிந்த நிலையில், பெங்களூரில் அவரது பணி வான்வழி அமைப்புகளின் மீது மாறியது. டிஆர்டிஓவில் இருந்தபோது நேரடியாக ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. திட்டமிடல், நிரலாக்கம் மற்றும் விமானிகள் கணினியை திறம்பட பயன்படுத்துவதற்கு நாங்கள் பொறுப்பாக இருந்தோம் என்கிறார் ராதிகா.
கார்கில் போர் மற்றும் ஆபரேஷன் பராக்ரம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தது ராதிகாவுக்கு சிஸ்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய நுண்ணறிவைக் கொடுத்தது. அவர் டிஆர்டிஓவில் சேர்ந்த பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் IAF அதிகாரி சுபோத் ஷர்மாவுடன் இணைந்து தொழில்முனைவில் ஈடுபட முடிவு செய்தார். இது பினாகா ஏரோஸ்பேஸின் பிறப்பிற்கு வழிவகுத்தது.தொடக்கத்தில் 3 ஊழியர்களுடன் ஒரு மென்பொருள் மற்றும் சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ‘பினாகா ஏரோஸ்பேஸ்’, பின்னாளில் ஒரு தயாரிப்பு சார்ந்த நிறுவனமாக வளர்ந்தது.அந்த காலக்கட்டத்தில், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (DPP) உருவாக்கபடவில்லை. அப்போது தேஜஸ் போர் விமானம் வடிவம் எடுத்துக்கொண்டு இருந்தது. ஆனால், அது இன்னும் பறக்கவில்லை. அச்சமயத்தில் நாங்கள் மென்பொருள் மேம்பாடு, சரிபார்ப்பு மற்றும் சேவைகளை வழங்கி கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியபோது, நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். பிறகு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமாக மாற்றினோம் என்கிறார் ராதிகா. சிக்கலான மென்பொருளுக்கான சுயதீன சரிபார்ப்பு மற்றும் வான்வழி வன்பொருள்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு என பினாகா இன்று பலவிதமான சேவைகளை வழங்கி தொழில் துறையில் முன்னணியில் உள்ளது. நாட்டின்
பாதுகாப்புக்கு முக்கியமான கடல்வழி, தரை அடிப்படையிலான மற்றும் வான்வழி அமைப்புகளை உள்நாட்டில் உருவாக்குவதில் நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன.3 ஊழியர்களுடன் தொடங்கிய நிறுவனம் இன்று பெங்களூரில் ஒரு லட்சம் சதுர அடியில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ஏவுகணைகளுக்கான சீரமைப்பு அமைப்புகளையும் வழங்குகிறது, சமீபத்தில், பாதுகாப்பு உற்பத்தியை விரிவுப்படுத்தும் நோக்கில் பினாகா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை ZETWERK கையகப்படுத்தி உள்ளது.OSA-AK SAM-8 ஏவுகணையின் சீரமைப்பு அமைப்பை மேம்படுத்தியதற்காக பிரதமரின் பாராட்டு முதல் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வழங்கும் சிறந்த விற்பனையாளர் விருது வரை, பினாகா அதன் பயணத்தில் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.நாட்டிற்குத் தேவையான பல அமைப்புகள் இங்கேயே உருவாக்கப்படுகின்றன. நாங்கள் மிகப்பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். மேலும் உலகின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம் என்றார் ராதிகா.ஒரு விஞ்ஞானியாக பணிபுரிகையில், அவர் கர்ப்பமாக இருந்தபோது சிஸ்டமைச் சோதிக்க தயக்கம் காட்டாமல் ஏணியில் ஏறி விமானி அறைக்குச் சென்றுள்ளார். பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் பயணிக்கும் ஒரு சில பெண் தொழில்முனைவோர்களில் ஒருவர் ராதிகா. இது அவர்களின் நிறுவனத்தை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு இட்டுச் சென்றது. இறுதியாக, பாதுகாப்பு துறையில் தொழில்பாதையை தொடங்க விரும்பும் பெண்களுக்கு ராதிகா சில முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இன்றைய இளைஞர்களுக்கு ராதிகா அவர்கள் சொல்லும் ஆலோசனைகள் என்னவென்றால் முதலில், நீங்கள் ஒரு உறுதியான கல்வி அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் பாதுகாப்புத் துறையில் கால் பதிக்க விரும்பினால், நீங்கள் படித்தவற்றை பிராக்டிக்லாக அப்ளை செய்யும் பணியிடங்களுக்கு சென்று இன்டர்ன்ஷிப் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, உறுதியுடன் செயல்படுங்கள். ஏனென்றால் நீங்கள் பணி மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் சமநிலையுடன் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம் என்கிறார். மேலும் படித்த படிப்பின் மூலமாக பெற்ற அறிவைக் கொண்டு தடைகளைத் தாண்டி புதிய சிந்தனையுடன்,புதிய பாதையை உருவாக்கி சாதித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

