சென்னை: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (30), இந்திய ராணுவத்தில் 2018ம் ஆண்டு பணியில் சேர்ந்து காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு ராணுவ வீரர் சக்திவேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
இதில், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர் சக்திவேல் தீவிரவாதிகள் எதிர் தாக்குதலில் சுட்டதில் குண்டடிப்பட்டு வீர மரணம் அடைந்தார் என்று இந்திய ராணுவம் சார்பில் திருத்தணி காவல் நிலையம் மற்றும் வீர மரணம் அடைந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல் காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து இன்று அவரது சொந்த ஊரான சத்திரஞ்ஜெயபுரம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேலுக்கு தேவஸ்ரீ (26) மனைவியும், ஆஷிகா செர்லின்(4) மகள் மற்றும் லெனின் அக்ரன் (2) என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

