மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் டபுள்-டெக்கர் பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 10 பேர் பலியாகினர், மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோ நாட்டின் மிச்சோகன் மாகாணத்தில் உள்ள மரவடியோ நகரில் இருந்து மெக்சிகோ சிட்டி நோக்கி 70க்கும் மேற்பட்டோருடன் டபுள் டெக்கர் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது மெக்சிகோ சிட்டியின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ நகரில் இன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தை பேருந்து கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதியது.
இதில் பேருந்து கடும் சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 61 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர், ரயில் வரும் சிக்னலை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மெக்சிகோ காவல்துறை வழக்குப்பதிவு செய்து ரயில்வேயுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.