சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக முழுகொள்ளளவை எட்டியது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,854 கன அடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. நீர் இருப்பு 92.645 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 23,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடி, மேற்கு கிழக்கு கால்வாய் வழியாக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நடப்பாண்டில் 6-வது முறையாக 120 அடியை எட்டியதால், வருவாய் துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளிப்பது, துணி துவைப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.