மெட்ரோ ரயில் நிறுவன கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தள்ளிவைப்பு: சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை: மெட்ரோ ரயில் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணிகளை தள்ளி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
டெண்டர் விடப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மெட்ரோ ரயில் ஆணையரிடம் இரு மாதங்களுக்கு பணிகளை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்ததால் தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் (பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, குருநானக் கல்லூரி) வேளச்சேரி மெயின் ரோடு மேம்பாலத்துடன் சுமார் 650 மீட்டர் தொலைவுக்கு ஒன்றாக வருகிறது. இதனால், மெட்ரோ ரயிலின் வடிவமைப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
முதலில் அடித்தளமும் மேம்பாலமும் கட்டப்பட்ட பிறகு, அதற்கு மேலே மெட்ரோ பாதை அமைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பணியை தொடங்கும் நிறுவனத்திற்கு தேவையான கூடுதல் நிதி வழங்கப்படும். ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

