Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு புதிய சாதனை, தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை

சென்னை: கடந்த 4 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: மாநில அரசின் சார்பாக, விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை 1974ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முதல் அறிவித்து வழங்கி நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் 2021 -2022ம் ஆண்டிற்குப்பின் ஒன்றிய அரசு சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதலாக ரூ.100, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75 உயர்த்தித் தந்தார்.

நடப்பாண்டில் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த விலையை விட சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.156, பொதுரக நெல்லிற்கு ரூ.131 கூடுதலாக உயர்த்தி வழங்கியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற 2021ம் ஆண்டிற்குப்பின் 2024 - 2025 ஆண்டு வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் ஆகும்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் சராசரியாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ஆண்டுக்கு 22 லட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன். ஆனால் முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆண்டுக்கு, சராசரியாக கொள்முதல் செய்துள்ள நெல் 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் ஆகும். அதாவது முந்தைய ஆட்சியைவிட திராவிட மாடல் அரசு 19 லட்சத்து 91 ஆயிரத்து 93 மெட்ரிக் டன் கூடுதலாகக் கொள்முதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி 24.10.2025 வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு10.40 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 1ம் தேதி தான் நெல் கொள்முதல் ஆரம்பிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுப்படி, இந்த ஆண்டின் பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் நெல் அறுவடை செய்து, புதிய விலையில் நெல் விற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே, செப்டம்பர் 1ம் தேதியே கொள்முதல் தொடங்கப்பட்டுவிட்டது. தற்போது கொள்முதல் செய்யப்பட்ட 10.40 லட்சம் மெ.டன்களில் 8.77 லட்சம் மெ.டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 லட்சம் மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசிற்கு 19.10.2025 அன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அக்கோரிக்கையை ஏற்று 23.10.2025 அன்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நெல் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று வல்லுநர் குழுக்களை நியமித்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, நிபுணர் குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

உணவுத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் குழு டெல்டா மாவட்டங்களில் 10.10.2025, 11.10.2025 ஆகிய நாள்களில் ஆய்வு செய்து கொள்முதல் மற்றும் நகர்வுப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் பேசி டெல்டா மாவட்டங்களுக்கு தினசரி 13 சரக்கு ரயில்கள் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது. ரயில்வே நிர்வாகமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக கொள்முதல் நடைபெறும் 13 மாவட்டங்களில் கூடுதலாக 127 பாப் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிக நெல் வரத்து இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 5,510.4 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 57,63,203 சாக்குகளும், 58 மெ.டன் சணல்களும், (15,204 + 13,652) 28,856 பிளாஸ்டிக் தார்ப்பாய்களும் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 2.65 கோடி சாக்குகள் இருப்பில் உள்ளன. தற்சமயம் திருவாரூரில் அதிக நெல் இருப்பு உள்ளதால் அதனை நகர்வு செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாரியாக பொறுப்பு அளித்து கூடுதலாக 2 பொது மேலாளர்கள், 64 கண்காணிப்பாளர்கள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் 4000 லாரிகள் மூலமாகவும், 13 முதல் 15 ரயில்கள் மூலமாகவும் நெல்கள் பாதுகாப்பாக கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் திட்டமிட்டு நகர்வு செய்யப்படுகிறது. 100 சுமை தூக்கும் பணியாளர்கள் 21.10.2025 முதல் கூடுதலாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 மண்டல மேலாளர்கள் குழு ஒரு கூடுதல் பதிவாளர் ஆகியோர் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்.

முதல்வர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவ கால சுமைதூக்குவோருக்கான ஊதியம் ஒரு மூட்டைக்கு ரூ.3.25 என்று இருந்ததை ரூ.10 என உயர்த்தி வழங்கி ஊக்கமளித்துள்ளார். இதனால், சுமார் 34,000 தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பொது விநியோக திட்டத்தினை வட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தவும் மற்றும் சேமிப்புக் கொள்ளளவினை மேம்படுத்தவும் ஆணையிட்டதைத் தொடர்ந்து, மொத்தம் 1 லட்சத்து ஆயிரத்து 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 83 வட்ட செயல்முறை கிடங்குகள் 199 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 38 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 கிடங்கு வளாகங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்படவுள்ளன.

மேலும் 62 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 67 கிடங்குப் பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 1ம் தேதி முதலே நெல் கொள்முதல் பணிகளை முடுக்கிவிட்டு அதன்மூலம் மிக அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதுடன் அவற்றை உடனுக்குடன் மாவட்டங்களுக்கு அனுப்புவதிலும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6 மணியில் இருந்து 8 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.