Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நலத்தில் நாட்டமில்லாத இயந்திர வாழ்க்கையால் ஐ.டி. ஊழியர்களை அதிகளவில் தாக்கும் வளர்சிதை மாற்றநோய்: ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்

‘‘ஏ சி அறையில் வேலை, ஐந்து இலக்கங்களில் ஊதியம், சொகுசான வாழ்க்கை’ இதுவே இன்றைய இளைஞர்களின் இலக்கு என்றால் அது மிகையல்ல. இதற்காக அவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளையே தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. கம்பெனிகளில் பணியாற்ற வேண்டும் என்பது அவர்களின் முதல்குறியாக உள்ளது. ஆனால், அவர்களுக்கு ஏற்படும் பணிரீதியான அழுத்தம், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்கள், ஒரு கட்டத்தில் மாரடைப்பு பாதிப்புக்கு வழிவகுத்து விடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தைச் (என்ஐஎன்) சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் ஐடி ஊழியர்கள், வளர்சிதை மாற்றம் தொடர்பான உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோளாறுகள் நாளடைவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற தொற்றா நோய்களுக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஐ.டி. துறையில் அழுத்தம் அதிகமாக இருப்பது, தீவிர உடல் பாதிப்புகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

26 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடந்த ஆய்வில் 42% பேர் உடல் எடை அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக, ஐடி துறை பணியாளர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகள் மற்றும் செரிமானம் தொடர்பான நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 46 சதவீதம் பேர், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளர்சிதை மாற்ற அபாய காரணிகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் கொழுப்பு புரத அடர்த்தி நிலை இயல்பைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தது. மேலும் அவர்களின் இடுப்பு சுற்றளவும் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: அலுவலகத்தில் ஊழியர்கள் தொடர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து பணிபுரியும் நேரமும் அவர்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. ஐடி பணியாளர்கள், ஒரு வேலை நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கையில் அமர்ந்த படியே பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, இதய நோய்களும் உண்டாகின்றன. இதை தவிர்ப்பதற்கு நடை பயிற்சியும், உடற்பயிற்சியும் மிகவும் அவசியம்.

முக்கியமாக ஆண்களின் இடுப்பு சுற்றளவு 90 செ.மீ. அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. அல்லது அதற்கு குறைந்து இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் அளவு 150 மில்லி கிராமிற்கும் அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதேபோன்று உயர் அடர்த்தி கொழுப்பு புரதத்தின் அளவு ஆண்களுக்கு 40 மில்லி கிராமுக்கு குறைவாகவும், பெண்களுக்கு 50 மில்லிகிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். பணிரீதியான இலக்குகளை அடைய அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாக உணவில் உரிய கவனம் செலுத்த முடிவதில்லை. கிடைத்ததை சாப்பிட்டு விட்டு பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. ஐடி ஊழியர்கள் மட்டுமின்றி, பிபிஓவில் வேலை செய்பவர்களும் இரவு பணிபுரிய (நைட் ஷிப்ட்) வேண்டியுள்ளது. இதன் விளைவாக அவர்கள் தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகின்றனர். அத்துடன் வயிற்று எரிச்சல், அஜீரணம் போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன. ஐடி ஊழியர்கள் பலர் இதுபோன்ற உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

26 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களின் உடல்நிலையில் ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு மற்றும் மன அழுத்தம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்னைகளுக்கு ஆளாவோருக்கு, மாதவிடாய் அதிக நாட்கள் ஏற்படுகிறது. நாளடைவில் நீரிழிவு நோய், இதய நோய்க்கு அவர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஐடி ஊழியர்கள் தங்களின் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி அவசியம். நொறுக்குத் தீனிகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்தபடி பணிபுரியும்போது. இடை இடையே இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடம் நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஹோட்டல் போன்ற வெளி இடங்களில் முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.