மெஸ்ஸி நாளை இந்தியா வருகை: முதல்வர், பிரபலங்களுடன் கால்பந்து போட்டி; 15ம் தேதி பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லி: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை பிற்பகல் 1.30 மணிக்கு கொல்கத்தா வரும் மெஸ்ஸிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், அவருடைய சிலை திறப்பு விழா நடக்கிறது. தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு, அவரை முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாரூக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோர் வரவேற்கின்றனர். பின்னர், நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி, அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார்.
இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் விளையாடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக ரேவந்த் ரெட்டி பயிற்சி எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது. 14ம் தேதி மும்பை செல்லும் மெஸ்ஸி, இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து, பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். 15ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர், அருண் ஜெட்லி மைதானத்தில் மினெர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உட்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மெஸ்ஸி பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் விற்பனை செய்யப்படுகிறது.
* ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம்
ஐதராபாத் வரும் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் ஒரு புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்பாடுக்குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறுகையில், ‘பலக்னுமா அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம். இதில், மெஸ்ஸியுடன் ரசிகர்கள் புகைப்பட்டம் எடுக்கலாம். ஒரு புகைப்படத்துக்கு ரூ.9.95 லட்சம். இதற்காக முன்பதிவு டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் கிடைக்கும். 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும்’ என்றார்.


