முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை: இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ம் தேதி வெளிநாடு பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான டிஎன் ரைசிங் ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின் போது, லண்டனில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமம், மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தி 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3வது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்திட உள்ளது. இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ.15,516 கோடியாகும். இதன்மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பாகும்.
இந்த குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை திட்டமிட்டு, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மேம்படுத்துகிறது. அஸ்ட்ராஜெனெகாவின் ஜிஐடிசி, அஸ்ட்ராஜெனெகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் 3வது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் முதல்வர் தலைமையிலான நிர்வாகத்தின் மீது உள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் முதல்வரின் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாக கொண்டவை ஆகும். இது ஜிசிசி-க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,293 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.820 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்து நாட்டு முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு ஜெர்மனியிடமிருந்து 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,020 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன்மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
திராவிட மாதிரியின் உத்வேகம்; முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை தளமாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகன சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ.7,500 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இது 1,000+ வேலைகளை உருவாக்குகிறது. ஆஸ்ட்ராஜெனெகாவின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், டிஎன் ரைசிங் இன் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பிரிவு ரூ.15,516 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது, இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைகளை உருவாக்குகிறது. இவை வெறும் எண்கள் அல்ல - அவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது செயல்பாட்டில் உள்ள திராவிட மாதிரியின் உத்வேகம்.