*கலெக்டர் சுகுமார் தகவல்
நெல்லை : நெல்லை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நாய்க்கடிக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதாகவும், இதுகுறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்றும் கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
திசையன்விளையில் கடந்த 20ம் தேதி இரவு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தெருவில் 8க்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவு முதல் சிகிச்சைக்காக திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவர் காயம்பட்ட இடத்தினை உரிய முறையில் சோப்பு போட்டு கழுவிடவும், பின்னர் நாய் கடித்தவர்களுக்கு தேவையான வெறிநாய்க்கடி தடுப்பூசி மருந்து மற்றும் டிடி தடுப்பூசியூம் வழங்கப்பட்டது.
அவர்களில் சத்தியகனி (63) என்பவர் 3-ம் வகை வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து ஹானஸ்ட் (30), சுயம்பு (80), ராஜபாண்டி(64), முத்துராஜ் (18), கருணாகரன் (52) இவர்களும் மேல்சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு உரிய முறையில் பரிந்துரை சீட்டு வழங்கி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மருந்து 69 குப்பிகள் மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபின் மருந்து 5 குப்பிகள் கையிருப்பு உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் தடையின்றி வெறிநாய்கடி மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,706 வெறிநாய் தடுப்பூசி மருந்து குப்பிகள் மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபின் 55 குப்பிகள் கையிருப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் போதிய அளவு வெறிநாய்க்கடி மருந்து எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வளர்ப்பு நாய், பூனை மற்றும் தெரு நாய்கள் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி தேவையான தடுப்பு மருந்துகளை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம்.
நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவு உள்ளது. தவறான தகவல் பரப்ப வேண்டாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.