சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மூலம் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் கட்டணம் வரம்பு கட்டண நிர்ணய குழுவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இவை எம்பிபிஎஸ் படிப்புக்கு சுமார் 3,300 இடங்களை வழங்குகின்றன. கல்விக் கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மேனேஜ்மெண்ட் மற்றும் என்ஆர்ஐ கோட்டா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2025-26 புதிய கட்டண விவரம்படி, தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்க கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.1.50 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. என்ஆர்ஐ கோட்டா கட்டணமும் ரூ.2.50 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் நிர்ணய குழுவின் மூலம் கட்டணம் வரையறுக்கப்படுகிறது.
கல்லூரிகளில் ஆவணங்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, கல்வி, அட்மிஷன், நூலகம், ஆய்வகம், கணினி, இணைய சேவை, விளையாட்டு, மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான குழு புதிய கட்டண வரம்பை நிர்ணயித்துள்ளது. அதில், தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டா மற்றும் மேனேஜ்மெண்ட் கோட்டா மற்றும் என்.ஆர்.ஐ மாணவர்களுக்கான கட்டணம் மறு பரிசீலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேனேஜ்மெண்ட் மற்றும் என்.ஆர்.ஐ கோட்ட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணம் ரூ.4,35,000 முதல் ரூ.4,50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அரசு ஒதுக்கீடு கட்டணத்தில் மாற்றம் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.4,35,000 முதல் ரூ.4,50,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, தனலட்சமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆகிய தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.40,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 சுயநிதி கல்லூரிகளுக்கான மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் ரூ.13,50,000 என இருந்த நிலையில், தற்போது ரூ.1.50 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.15,00,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இக்கல்லூரிகளில் என்ஆர்ஐ இடங்களுக்கு ரூ.24,50,000 என கட்டணம் இருந்த நிலையில், தற்போது ரூ.2.50 லட்சம் உயர்த்தப்பட்டு ரூ.27,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 தனியார் பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மெண்ட் கோட்டா கட்டணம் ரூ.29,40,000 என இருந்த நிலையில், ரூ.60,000 அதிகரிக்கப்பட்டு ரூ.30,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, கிளினிக்கல் முதுகலை படிப்பிற்கு அரசு கோட்டாவில் ரூ.3,50,000, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் ரூ.16,00,000 மற்றும் என்ஆர்ஐ கோட்டாவில் ரூ.29,00,000 என வசூலிக்கப்படும். மருத்துவம் அல்லாத (Non-Clinical) மற்றும் இதர முதுகலை படிப்பிற்கு அரசு கோட்டாவில் ரூ.3,00,000, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் ரூ.5,00,000 மற்றும் எனஆர்ஐ கோட்டாவில் ரூ.19,00,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இக்கட்டணம் விவரங்கள் 2025 முதல் 2028 கல்வி ஆண்டு வரை கடைபிடிக்கப்படும். கூடுதலாக கல்லூரி மேம்பாட்டு நிதியாக கல்லூரிகள் மாணவர்களிடம் ரூ.60,000 வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விவரங்களில் விடுதி, போக்குவரத்து மற்றும் மெஸ் கட்டணம் ஆகியவை இடம்பெறாது. அவை கல்லூரிகளுக்கு ஏற்ப மாணவர்கள் செலுத்த வேண்டும். மாணவர்கள் புதிய கட்டணத்திற்கு ஏற்ப கல்லூரிகளை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.