சென்னை: மதிமுக சட்ட விதிகளின்படி மல்லை சத்யாவுக்கு ஒழுங்கு நடவடிக்கை அனுப்பட்டுள்ளது என வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில், துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதிமுக துணைப் பொதுச் செயலாளர் சி.ஏ. சத்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கண்ணியத்தை சீர்குலைத்தும், கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டும் வருவதால், அவர் வகித்து வரும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி சட்டதிட்ட விதிகளின்படி அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.