வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு; 3வது பிரசவத்திற்கு விடுப்பு தர மறுப்பது நியாயமற்றது: பெண் ஊழியர் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவர், மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் வழங்கக் கோரி ஆகஸ்ட் 14ம் தேதி முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு விண்ணப்பம் அளித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் பணியில் சேர்வதற்கு முன்பே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். பணிக்கு சேர்ந்த பிறகு மூன்றாவது முறையாக கருவுற்றிருக்கிறார். இதுபோன்று பணிக்கு சேர்ந்த பிறகு கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு உமாதேவி என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது. எனவே, ரஞ்சிதாவுக்கு உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்றம் சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.