புளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் நகரில் நடக்கிறது. அதன் பிறகு இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாடில் நடக்கும். அதன்படி, முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி நேற்று காலை லாடர்ஹில் நகரில் நடந்தது.
வெ.இ. பந்து வீச்சை தேர்வு செய்ய, பாக் முதலில் மட்டையை சுழற்றியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர், சைம் அயூப் 57 (38 பந்து) எடுத்தார். வெ.இ தரப்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட் அள்ளினார்.அதனையடுத்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இ. விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்ள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 72 ரன் விளாசி நம்பிக்கை அளித்தனர்.
ஜான்சன் கார்லஸ் 36 பந்துகளிலும், ஜூவல் ஆண்ட்ரூ 33 பந்துகளிலும் தலா 36 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் குறைந்த ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதே நேரத்தில் 8வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஜேசன் ஹோல்டர், ஷமார் ஜோசப் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அது இலக்கை எட்ட உதவவில்லை. எனவே வெ.இ. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் பாக். 14 ரன்னில் முதல் வெற்றியை பெற்றது.