கிறைஸ்ட்சர்ச்: இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்- சால்ட் ஜோடியின் அதிரடியால் 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.
ப்ரூக் 35 பந்தில் 78 ரன்களும் சால்ட் 56 பந்தில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 18 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.