சென்னை: மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. மேலும் பட்டம் பெற்ற மணமகளுக்கு உதவித்தொகையாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டாலும், 4 திருமண உதவித் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, அரசு நலத்திட்டங்களை தடையின்றி மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான படியாகும். தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களுக்குத் தேவையான தங்க நாணயங்களைக் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க தேவைப்படும் 5,640 எண்ணிக்கையிலான 8 கிராம் - 22 காரட் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய வேண்டி தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தங் ஆபரணங்கள், தங்க நாணயங்கள் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களிடமிருந்து மின் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இதன் மதிப்பீடு மொத்தம் ரூ.45 கோடி ஆகும்.
ஒப்பந்தப்புள்ளி படிவம் 10.9.2025 முதல் 9.10.2025 மாலை 3 மணி வரை பெறப்படும். ஒப்பந்தப்புள்ளிகள் 9.10.2025 மாலை 4 மணியளவில் மேற்கொண்ட விலாசத்தில் ஒப்பந்தப்புள்ளி கூர்ந்தாய்வு குழுவால், சமூக நல இயக்குநர் முன்னிலையில் சமூக நல இயக்குநரகம், சென்னை-05 என்ற முகவரியில் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை httos://tntenders.gov.in என்ற இணையத்திலிருந்து 10.9.2025 முதல் 9.10.2025 பிற்பகல் 1 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஈஎம்டி தொகை ரூ.45,12,000 இணையதளத்தின் வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன்கூட்டம் 23.9.25 கலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதர நிபந்தனைகள் ஒப்பந்தப்புள்ளி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.