சென்னை: பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், துபாய் தொழிலதிபரை காதல் திருமணம் செய்கிறார். அவர்களின் திருமணம் வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடக்கிறது. தமிழில் ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத்தமிழன்’, ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், நிவேதா பெத்துராஜ் (34). தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட அவர், பேட்மின்டனில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திலும் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று நிவேதா பெத்துராஜ் தனது காதலனுடன் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு, அந்த போட்டோவுக்கு கீழே ஹார்ட் எமோஜிக்களை பதிவிட்டிருந்தார். அவரது காதலரின் பெயர் ராஜித் இப்ரான். மாடலிங் துறையை சேர்ந்த அவர், துபாய் மற்றும் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார். ராஜித் இப்ரானுக்கும், நிவேதா பெத்துராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் அவர்களின் திருமணம் நடக்கிறது. இதுகுறித்து நிவேதா பெத்துராஜிடம் கேட்டபோது, ‘நானும், ராஜித் இப்ரானும் கடந்த 5 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.
ஒருகட்டத்தில் நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதை அறிந்தோம். இதுகுறித்து இருவீட்டு பெற்றோரிடம் சொன்னோம். அவர்கள் சம்மதித்தனர். இது இருவீட்டு பெற்றோர் சம்மதம் மற்றும் ஆசியுடன் நடக்கும் காதல் திருமணமாகும். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு எனக்கும், ராஜித் இப்ரானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஜனவரி மாதம் சென்னையில் எங்கள் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்’ என்றார்.