நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்த 22வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார். அப்போது அவருக்கும் பெருவிளை பகுதியை சேர்ந்த பார்த்தீபா (25) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி படிக்கும்போது 2 பேரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர்.
பார்த்தீபா அந்த மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சென்னையில் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்றும், வெள்ளமடத்தில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் மாணவியை ஏமாற்றி 6.5 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அதன் பிறகு கொடுத்த பணத்தையும், நகையையும் மாணவி, பார்த்தீபாவிடம் கேட்டுள்ளார். ஆனால் பணம், நகையை திரும்ப கொடுக்காமல், மாணவியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை சமுகவலைதளத்தில் பரப்பிவிடுதாக பார்த்தீபா மிரட்டியுள்ளார். இந்நிலையில் பார்த்தீபாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம், மாணவிக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக அவரிடம் மாணவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்தீபா தகாத வார்த்தையால் அந்த மாணவியை திட்டியுள்ளார். மேலும் முகத்தில் ஆசிட் அடித்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ஏமாற்றப்பட்ட மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பார்த்தீபா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.