மாமல்லபுரம்: சென்னை பெரம்பூர் அருகே சக்கரபாணி தோட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், உறவினர்கள் 17 பேருடன் ஒரு வேனில் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கடற்கரைக்கு நேற்று முன்தினம் மாலை வந்தனர். பின்னர், அனைவரும் கடலில் ஆனந்தமாக குளித்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் வெங்கடேசன் (37). அவரது, மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) மற்றும் ஹேமாவதி (37) ஆகியோர் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் அங்கிருந்த மீனவர்கள் விரைந்து செயல்பட்டு ஹேமாவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தந்தை, 2 மகள்கள் ஆழமான பகுதிக்குள் சென்றதால் அவர்களை மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கியது. கார்த்திகா, துளசி ஆகியோரை தேடும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை சூளேரிக்காடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.