சென்னை: மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்த சென்யார் என்ற பெயர் புயலுக்கு சூட்டப்பட்டது. நவ.22ல் மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுவடைந்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த 22ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. அது நேற்று முன்தினம் மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும் எனவும் இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (சென்யார் புயல்) வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் நேற்று தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக உருவாகியுள்ளது. சென்யார் புயலால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயலால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


