ரூ.40 லட்சம் பராமரிப்பு தொகை தருவதாக ஏமாற்றி விட்டார்; நடிகர் சரவணன் மீது முதல் மனைவி புகார்: போலீசார் விசாரணை
சென்னை: பராமரிப்பு தொகை ரூ.40 லட்சம் தருவதாக கூறி நடிகர் சரவணன் ஏமாற்றிவிட்டதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது முதல் மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
1990களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சரவணன். 2007ம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கோலாமாவு கோகிலா, அரண்மனை, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்தார். இவர் கடந்த 2003ம் ஆண்டு சூர்ய என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015ம் ஆண்டு தேவி என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி, பின்னர் 2019ம் ஆண்டு தேவியை 2வது திருமணம் செய்து கொண்டார். மாங்காடு அருகே மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மனைவி தனியாகவும் இரண்டாவது மனைவியுடன் சரவணன் வசித்து வந்தார்.
இந்நிலையில், முதல் மனைவி சூர்ய ஆவடி காவல் ஆணையரகத்தில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் கஸ்டம்ஸ் ஏஜென்சி ஹவுஸ் தொழில் செய்து வந்தேன். நானும், சரவணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனது சம்பாத்யத்தில் சரவணனுக்கு நிதி உதவி செய்து வந்தேன். தற்போது எனக்கு சாப்பாடு கூட போடவில்லை. 2வது மனைவியுடன் சேர்ந்து சரவணன் என்னை அடித்து துன்புறுத்துகிறார். முதல் மனைவியான எனக்கு ரூ.40 லட்சம் பராமரிப்பு தொகை தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூர்ய , ‘சரவணன் மற்றும் அவரது 2வது மனைவியும் சேர்ந்து அடிக்கடி என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். தற்போது, எனது உறவினர்கள் கொடுக்கும் பணத்தில் உயிர் வாழ்ந்து வருகிறேன். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சரவணனும் அவரது 2வது மனைவி தேவி தான் காரணம், என்றார்.