Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேச்சு மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னை அருகில் உள்ள காட்டாங்கொளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதுகுறித்து பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இதுதொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், மதுரை ஆதீனம் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் விதத்தில் சர்ச்சையாக பேசியதால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மதுரை ஆதீனம் முரணாக பதிலளிக்கிறார். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மதுரை ஆதீனம் தரப்பில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், காவல்துறையினர் சிலர் சீருடையில்லாமல் விசாரணைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தை காவல்துறை வழக்காக பதிவு செய்து பெரிதபடுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை நிலை குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யேண்டும். அதுவரை ஆதீனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.